Thursday, June 24, 2010

அலகு தீட்டி சுள்ளி முறித்து



காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கை என்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்த்தவனா
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன்தான்
புயல் காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக் குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப் பழ வாய் விரித்து
உம்மா என்னும் என் குஞ்சு பொன் குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைபடையா இறக்கையாலே
சுழன்றாடி காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதை இல்லை
வாழ்வோரை வாழவிட
ஈவு இரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒரு போதும் துப்பாக்கி துணையாகா

( விபவி முதல் பரிசு -2006)

மூன்றாமவனின் புலம்பல்


சொல்லுங்கள்
பூர்வீக மண்ணை விட்டும்
பிரிந்து போகிறேன்
சொல்லுங்கள்
இறந்து போகவும் சம்மதம்
சுட்டுக் கொல்லவேண்டுமா
சொல்லுங்கள்
பள்ளி வாசலில் வந்து
வசதியாய் வரிசையில் நிக்கிறேன்
வெட்ட வேண்டுமா
வாளை நீட்டுங்கள்
வந்து வீள்கிறேன்
ஒரு முறை கொன்று
ஆத்திரம் அட்ங்கவில்லையா?
அப்படியானால்
இறைவனை வேண்டி
மீண்டு மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
மேல மேலக் கொல்லுங்கள்
இசைந்து தருகிறேன்
உங்கள் பங்கர்களின் மண்சாக்காய்
என்னை அடுக்குங்கள்
மொட்டார் குண்டுகளுக்கு
என் மூழை சிதறட்டும்
சீலைத் துண்டாய்
சொர்ந்த்து கிடக்கிறேன்
என்னை எடுத்து
உன்கள் துப்பாக்கிகளைத்
துடைத்துக் கொள்ளுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
என்னைக் கொல்லுங்கள்
அதற்குமுன் சொல்லுங்கள்
நண்பர்களே
நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள்
ஆனால்...
நான் என்ன கேட்டேன்?
இறக்கவும்... இழக்கவும்...