மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்
yr 3rd eye is has well power like yr pen and brush.jazakallahu khaira.keep it. peer mohamed mou.
ReplyDeletethanks bro,
ReplyDelete