நான் ஒரு குயில் போல அலைபவன்
பாவம் என்றும் சொல்லலாம்
ஒரு கூட்டை வரைவது குறித்த
எனது பார்வை விசித்திரமானது
அதை எங்கிருந்து தொடங்குவது
எங்கே முடிப்பது என்பதற்கு அப்பால்
மனதின் வரை படத்தை
அதன் வசீகரம் கெடாது
எப்படி ஈன்றெடுப்பது
என்பதில் எழும் கேள்விகள்
வாதப் பிரதி வாதங்கள்
சவால்கள்
கூடு வரைவது குறித்த
எனது கனவையே
புறம் தள்ளி விடுகின்றன
ஆனால்
மனத்தைக் கூடாக்கும்
சிரமத்தைத் தவிர்த்து
தான் வரைந்ததையெல்லாம்
மனதாக்கிக் கொண்டவர்கள்
கூடுகளை
வரைந்து கொண்டே இருக்கிறார்கள்
நான் அவர்களின்
கூடுகளைப் பார்த்து
கேள்விகளை மாத்திரம்
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்கூடு மட்டும்
என் மனதுக்குள்ளேயே கிடக்கிறது
வரையப் படாமல்
எஸ்.நளீம்
16.10.2011
No comments:
Post a Comment