Friday, March 5, 2010

இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை

ஊர் தூங்கும்
கரு இரவின் பிற்பாதிக்
குளிரிலும் மனவெம்மை
அயலெல்லாம் துப்பாக்கியேந்திப் பிரசன்னம்
குருதிப் புனலெலாம் கிளி கவிந்து
திருடனின் அந்தப்புரத்தில்
தனித்துத் தவித்திட்ட ஜீவிதம்
நத்தைகள் ஊரும் அகநிலத்தில்
எதை விதைப்பேன்
குஞ்சு பொரித்துப் பறக்கா
இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை
நாக பாம்பாட்டம் கொத்திக் குடிக்கும்
சூரிய கிரணக் கீற்று
பின் தொடரும் மரண பயக் காலமதாய்
நாள் நீளும்
அருகே கண்ணுறங்கும்
நிலா குஞ்சின் முகம் பார்த்து
ஆகாய விழி பிதுங்கி ஒரு சொட்டுச் சொட்டாதா
அது வீழ்ந்தால்
மனதில் சிர்ரென்று நீர் கருகும்
மடித்த கையில் கண் வளரும்
மனையாளின் தலை நீவி
உயிர் சிலிர்ப்பி முத்தமிட
உதவாத இரவாச்சு
மூளைக்குள் நசிபட்டு
வெட்டுக்கிளி உதைக்கும் உயிர் வெளியில்
நரம்புளகி நலிவுற்ற
மனதெழுப்பிக் கவிபாட முடியா
போர் முனைப் படையணியாய்
மண் கிழித்து வெளிப்பட்டு
விரைந்த்தோடி மடியும் ஈசலதா மனித வாழ்வும்

septempar2006

No comments:

Post a Comment