Friday, March 4, 2011

கொடூரங்களால் ஆனது



மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்  
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல 
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்

Saturday, February 12, 2011

சட்டத்திலடைக்கும் கோடுகள் ...



நாளின் வசீகரம் குறித்து
ஒரு உதயம் எழுதித்தரும்
நட்சான்றை
விசுவாசிப்பதில்லை மனது.
போர் ஓய்ந்த
புலரும் பொழுதிலும்
நம்பிக்கை இல்லை இன்றில்.
ஒருவர்
இறந்தால் என்ன ?
பிறந்தால் என்ன ?
குதூகலமற்ற வாழ்வில் ...
ஒரு பதுங்கு குழியை
தயார் செய்துகொண்டு
சட்டென மறையத் தெரிந்ததால்
ஒரு கடற்கரை நண்டு நாம்.
அனால் முடிகிறதா ?
அன்றாடம்
மேலும் மேலும் ...
நம்மைச் சட்டத்துக்குள்
அடைக்கின்றன
நேரும் கிடையுமாய்
நம்மில் விழும் கோடுகள்   

எஸ். நளீம்   
நன்றி :
"விடிவெள்ளி "
"வார்ப்பு "

Wednesday, October 27, 2010

விதி


 
எந்தக் குழந்தையும்
தெரிந்து வைத்திருப்பதில்லை
எத்தனையாவது தடவை ஊதும்போது
தன் பலூன் வெடிக்கும் என்பதை.
எஸ்.நளீம் 

Tuesday, July 27, 2010

இருள் ஒதுங்கும் மூலை



அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?

எழுத்தாய் உதிரும் நாம்



மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை

Thursday, June 24, 2010

அலகு தீட்டி சுள்ளி முறித்து



காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கை என்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்த்தவனா
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன்தான்
புயல் காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக் குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப் பழ வாய் விரித்து
உம்மா என்னும் என் குஞ்சு பொன் குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைபடையா இறக்கையாலே
சுழன்றாடி காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதை இல்லை
வாழ்வோரை வாழவிட
ஈவு இரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒரு போதும் துப்பாக்கி துணையாகா

( விபவி முதல் பரிசு -2006)

மூன்றாமவனின் புலம்பல்


சொல்லுங்கள்
பூர்வீக மண்ணை விட்டும்
பிரிந்து போகிறேன்
சொல்லுங்கள்
இறந்து போகவும் சம்மதம்
சுட்டுக் கொல்லவேண்டுமா
சொல்லுங்கள்
பள்ளி வாசலில் வந்து
வசதியாய் வரிசையில் நிக்கிறேன்
வெட்ட வேண்டுமா
வாளை நீட்டுங்கள்
வந்து வீள்கிறேன்
ஒரு முறை கொன்று
ஆத்திரம் அட்ங்கவில்லையா?
அப்படியானால்
இறைவனை வேண்டி
மீண்டு மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
மேல மேலக் கொல்லுங்கள்
இசைந்து தருகிறேன்
உங்கள் பங்கர்களின் மண்சாக்காய்
என்னை அடுக்குங்கள்
மொட்டார் குண்டுகளுக்கு
என் மூழை சிதறட்டும்
சீலைத் துண்டாய்
சொர்ந்த்து கிடக்கிறேன்
என்னை எடுத்து
உன்கள் துப்பாக்கிகளைத்
துடைத்துக் கொள்ளுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
என்னைக் கொல்லுங்கள்
அதற்குமுன் சொல்லுங்கள்
நண்பர்களே
நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள்
ஆனால்...
நான் என்ன கேட்டேன்?
இறக்கவும்... இழக்கவும்...