Sunday, May 29, 2011
Friday, March 4, 2011
கொடூரங்களால் ஆனது
மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்Saturday, February 12, 2011
சட்டத்திலடைக்கும் கோடுகள் ...
நாளின் வசீகரம் குறித்து
ஒரு உதயம் எழுதித்தரும்
நட்சான்றை
விசுவாசிப்பதில்லை மனது.
போர் ஓய்ந்த
புலரும் பொழுதிலும்
நம்பிக்கை இல்லை இன்றில்.
ஒருவர்
இறந்தால் என்ன ?
பிறந்தால் என்ன ?
குதூகலமற்ற வாழ்வில் ...
ஒரு பதுங்கு குழியை
தயார் செய்துகொண்டு
சட்டென மறையத் தெரிந்ததால்
ஒரு கடற்கரை நண்டு நாம்.
அனால் முடிகிறதா ?
அன்றாடம்
மேலும் மேலும் ...
நம்மைச் சட்டத்துக்குள்
அடைக்கின்றன
நேரும் கிடையுமாய்
நம்மில் விழும் கோடுகள்
எஸ். நளீம்
நன்றி :
"விடிவெள்ளி "
"வார்ப்பு "
Wednesday, October 27, 2010
Tuesday, July 27, 2010
இருள் ஒதுங்கும் மூலை

அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?
எழுத்தாய் உதிரும் நாம்

மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை
Subscribe to:
Posts (Atom)




