Saturday, August 17, 2013

( நேத்ரா தொலைக்காட்சி யில் கடந்த 22.07.2013 அன்று இப்தார் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற எனது கவிதை )

ரமழான் எனும் மருத்துவம்


பனியில் குளித்து
காற்றில் உலர்த்தும்
ரோஜாவாய்
சடசடக்கும் மனதுடன்
கவிதைக்கு காதீந்து
பார்த்திருக்கும்
நேத்ரா நேயர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் !

ரமழானை ஈன்றளித்து
அதன் இறுதி நாளில்
மகிழ்வளித்து
மறைந்திருக்கும்
இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல் ஹம்துலில்லாஹ்

குரான் ஓதல் ,
இறைவனை தொழுதல் ,
பசித்திருத்தல்
மூன்றும் நோன்பின்
முக்கிய முகங்கள் !
முக்கிய அமல்கள் !

வைத்தியம்: வார்த்தைகளாக வந்தது
அது குரான் !
வைத்தியம்: தேகப்பியாசமாக வந்தது
அது தொழுகை !
வைத்தியம்:வயிற்றுககாய் வந்தது
அது நோன்பு !
வைத்தியம் கவிதையாகிறது .

வானம் : இறை மருத்துவன் எழுதித்தந்த
மருந்துச் சீட்டு !
அதனால்தான் வானத்தை பார்த்தே
நோன்பு தொடங்குது,முடியுது!

நிலவைத் தேதித்தாளாக தெரிந்த
நமக்குத் தெரிவதில்லை
நிலா மேகக் கடதாசியில் மடிக்கப்பட்ட
மாத்திரைஎன்று !

உலகின் நோய் தீர்க்க
வருடத்துக்கு பனிரெண்டு மாத்திரைகள்
மனிதின் பிணி தீர்க்க
வருடத்துக்கொரு வில்லைதான் !

சக்காத்:மனிதனின் மருத்துவச் செலவீனம்
வயிறு
பிணிகளின் முகாம் என்பதனால்தான்
வைத்தியம் வயித்திளிருதே தொடங்குது!

ஈவு,இரக்கமற்றது வயிறு
பசியால் எத்தனைபேரை
கள்வனாக்கியிருக்கிறது
எத்தனைபேரை
கொலைகாரனாக்கியிருக்கிறது
எத்தனை பேரை அனாவசியமாய்
சிறைச் சாலை அனுப்பியிருக்கிறது !

காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான் !
அந்த வயிறு தோற்றதே நோன்பிடம்தான் !

நோன்பு ஏழைகளின்
பிரதான மருந்து
சுமையான நோய்களுக்கு
சுகமான மருந்து !

ஆங்கில மருத்துவம் அறிய இந்த
நோன்பு மருத்துவத்தில்
ஆயிரம் இருக்கிறது !

சுகாதார அமைச்சோடு
கோபம் எனக்கு !
நோய்களுக்கு எதிராய்
குப்பை கூளங்களை அகற்றச்செயும் நீர்
தொன்றுதொட்டு தேங்கிக்கிடக்கும்
வயிறுகளையும்
சுத்தி கரிக்கச் செய்யாததட்காய் !

மருத்துவர்களோடும்
மனவருத்தம்
வேளைக்கு மாத்திரையைப்
பரிந்துரைக்கும் நீர்
நோன்பையும்
மருந்தாகச் சொல்லாததட்காய் !

நோன்பு இறை மருத்துவன் கைக்
கத்தரிக்கோல் !
அதுதான்
மனிதனை பாவ சவ்வுகளை
சத்திர சிகிச்சையால் அகற்றி விடுகிறது
நோன்பு
வெட்டாமல் குத்தாமல் செய்யும்
லேசர் கதிர் மருத்துவமும்தான் !
பணத்தால் விளையும்
தலைக்கனக் கட்டிகளை
உள்ளுக்குள் வைத்தே
உடைத்து விடுகிறது !

சக்காத் :
மனோ தத்துவ வைத்தியம்
தானம் உயிர் காக்கும்
என்ற நம்பிக்கையில்
நம்பிக்கைவைத்த வைத்தியம் !

பிந்திய பத்தில்
லைலதுல் கதிர் வருவது ஏன் தெரியுமா ?
வழங்கப் பட்ட வைத்தியத்தின்
விளைவை அறியத்தான் !
'லைலதுல் கத்ர்'
இறை வைத்தியன் நோயாளியை
பக்கத்தில் அழைத்துப் பரிசோதிக்கும் நாள் !

இப்படியாக
ஒரு நோய் எதிர்ப்பு மாதத்தையே
மார்க்கத்தின் அங்கமாக்கியது
இஸ்லாம்தான் !

Friday, December 30, 2011

கூடு வரைதல்






















நான் ஒரு குயில் போல அலைபவன்
பாவம் என்றும் சொல்லலாம்
ஒரு கூட்டை வரைவது குறித்த
எனது பார்வை விசித்திரமானது
அதை எங்கிருந்து தொடங்குவது
எங்கே முடிப்பது என்பதற்கு அப்பால்
மனதின் வரை படத்தை
அதன் வசீகரம் கெடாது
எப்படி ஈன்றெடுப்பது
என்பதில் எழும் கேள்விகள்
வாதப் பிரதி வாதங்கள்
சவால்கள்
கூடு வரைவது குறித்த
எனது கனவையே
புறம் தள்ளி விடுகின்றன
ஆனால்
மனத்தைக் கூடாக்கும்
சிரமத்தைத் தவிர்த்து
தான் வரைந்ததையெல்லாம்  
மனதாக்கிக் கொண்டவர்கள்
கூடுகளை
வரைந்து கொண்டே இருக்கிறார்கள்
நான் அவர்களின்
கூடுகளைப் பார்த்து
கேள்விகளை மாத்திரம்
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்கூடு மட்டும்
என் மனதுக்குள்ளேயே கிடக்கிறது  
வரையப் படாமல்

எஸ்.நளீம்
16.10.2011

Saturday, December 17, 2011

பாணிச் சேவல் குரல் எழுப்பித் தொண்டை கம்மி ...



தன்  பரட்டைத் தலை விரித்து எழும்பாதா?
எங்கிலும் மூடு பனி 
மரம் சார்ந்த பச்சை இருள் 
சற்று சிவப்பாகி 
மீண்டும் மீண்டும் நீல இருள்
வானம் ஒரு குப்பைத் திடல் 
கசக்கி வீசிய முகில் குவிந்து 
கழுத்து வரைக்கும் வெள்ளம் 
நான் அதிகாலைப் பாணிச் சேவல் 
குரல் எழுப்பித் தொண்டை கம்மிப் பலன் என்ன 
வெளுக்காத கிழக்கில் 
உதய சூரியன் கவிழ்ந்து 
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா?
எங்கிலும் குப்பை குப்பை ....

நன்றி 
(உயிர்மை -இந்தியா )
மார்ச் -2006







Saturday, September 24, 2011

வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல்


உடலை உலுக்கும்
ஒரு நொடிப் பொழுதாய்
எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது
என்னைப் பார்த்து
தகிக்கும் இந்த நெருப்பில்
தீ மூட்டியது நான் இல்லை தான்
வார்த்தைகளைப் பொறுக்கிக் கோர்க்கையில்
ஆகி விட்டது
உனக்கும் எனக்குமான ஏதோவொன்று

விசிலடித்து வரவழைக்க
வராத
எம்மைக் கடந்து செல்கிற காலத்தில்
வசீகரமற்ற  ஒரு வாழ்வாய்
கனவின் ஒவ்வொரு படிகளிலும்
சறுக்கிக் கொண்டேயிருக்கும்
என் இருப்பை
யாரால் அறுதியிட முடியும்.?

மனதை உருக்கும் உன் வாசகங்களுக்கு
என்னிடம்
ஆறுதலாய் ஒரு பதிலில்லாத போது
அம்மோ…. என்றாகிவிடும்
உன் வாழ்வு குறித்த பிராந்தி
என்றென்றும்
என் பயண நெடுகிலும்
என் பாதங்களைக்
குதறியபடி தொடர்கின்றன

யதார்த்தத்துடன் வசப்படாத
ஒரு வாழ்வை
கட்டமைப்பதில் ஏன்
இத்தனை பிரயாசை கொள்கின்றாய்

ஏன் இன்னும் கடந்து போன
காலங்களையே
கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றாய்.

 எஸ். நளீம்

Thursday, July 7, 2011

நிலா வந்து இருள் தின்று...


குருவி இரத்தம் போல் வடிந்து
கரைகிறது கடலில்
கொழியறுக்கிறதா வானம்
இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை  
சேர்த்துத் தெளிக்கிறதா ?
இல்லை இனி இருளில்லை என்றே
தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம்

இருபது வருடங்கள்
மகிழ்வா அல்லது துயரமா
சூரியனே உன் விருந்து யாருக்கு ?
மௌனத்தின் குழந்தைகளாய்
இறக்காத சுமைகளோடு மீள்கிறோம்
பிறந்த மண்ணுக்கு

ஒரு இரவை இழுத்துவர
இரத்தம் சிந்தி உழைக்கின்றாய் வானமே
நீயும் எங்கள் சாதி

பாவம்
முட்டையிட்டும்
கொக்கரிக்கா எங்கள் பேடுகள்
இனிச் சேவல்ப் பூச் சிவப்பாய்
சிவக்க வேண்டாம் ஓய்வுகொள் நீ

நிலா வந்து இருள் தின்று
பால் பருகும் பூமி
நிசப்தத்தைக் கொல்லாத தித்திக்கும் நொடிகள்.

எல்லாப் புகழும் ஒருவனுக்கே
இது தொடரட்டும்
இத்துடன் என் 'ஈறல்' கவிதை சாந்தி கொள்கிறது
அந்தப் பரட்டைக் கவிஞன் இல்லாத போதும்.
அவன் கிடக்கான்
அவன் நடிகன்.

நன்றி; எங்கள் தேசம்
  

சிந்தனைக்கு


உனக்கு நீ மூட்டும் தீ
"ஏஸ் ரே"யில் வீழ்வது
 கருகிய உன்சுவாசத்தின் சாம்பல் ...

Sunday, May 29, 2011

வெளியேற்றம்

மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய் 
அதில் சிதறிய நீராய் 
வெளியே கிடந்தாய் 

எஸ்.நளீம்

வறுமை

காகம் கரைந்துகொண்டே இருந்ததால் 
திக்கென்றது மனது 
யாரும் வரக்கூடும் என்ற பயத்தில்

எஸ்.நளீம் 

Friday, March 4, 2011

கொடூரங்களால் ஆனது



மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்  
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல 
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்

Saturday, February 12, 2011

சட்டத்திலடைக்கும் கோடுகள் ...



நாளின் வசீகரம் குறித்து
ஒரு உதயம் எழுதித்தரும்
நட்சான்றை
விசுவாசிப்பதில்லை மனது.
போர் ஓய்ந்த
புலரும் பொழுதிலும்
நம்பிக்கை இல்லை இன்றில்.
ஒருவர்
இறந்தால் என்ன ?
பிறந்தால் என்ன ?
குதூகலமற்ற வாழ்வில் ...
ஒரு பதுங்கு குழியை
தயார் செய்துகொண்டு
சட்டென மறையத் தெரிந்ததால்
ஒரு கடற்கரை நண்டு நாம்.
அனால் முடிகிறதா ?
அன்றாடம்
மேலும் மேலும் ...
நம்மைச் சட்டத்துக்குள்
அடைக்கின்றன
நேரும் கிடையுமாய்
நம்மில் விழும் கோடுகள்   

எஸ். நளீம்   
நன்றி :
"விடிவெள்ளி "
"வார்ப்பு "

Wednesday, October 27, 2010

விதி


 
எந்தக் குழந்தையும்
தெரிந்து வைத்திருப்பதில்லை
எத்தனையாவது தடவை ஊதும்போது
தன் பலூன் வெடிக்கும் என்பதை.
எஸ்.நளீம் 

Tuesday, July 27, 2010

இருள் ஒதுங்கும் மூலை



அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?

எழுத்தாய் உதிரும் நாம்



மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை

Thursday, June 24, 2010

அலகு தீட்டி சுள்ளி முறித்து



காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கை என்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்த்தவனா
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன்தான்
புயல் காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக் குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப் பழ வாய் விரித்து
உம்மா என்னும் என் குஞ்சு பொன் குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைபடையா இறக்கையாலே
சுழன்றாடி காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதை இல்லை
வாழ்வோரை வாழவிட
ஈவு இரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒரு போதும் துப்பாக்கி துணையாகா

( விபவி முதல் பரிசு -2006)

மூன்றாமவனின் புலம்பல்


சொல்லுங்கள்
பூர்வீக மண்ணை விட்டும்
பிரிந்து போகிறேன்
சொல்லுங்கள்
இறந்து போகவும் சம்மதம்
சுட்டுக் கொல்லவேண்டுமா
சொல்லுங்கள்
பள்ளி வாசலில் வந்து
வசதியாய் வரிசையில் நிக்கிறேன்
வெட்ட வேண்டுமா
வாளை நீட்டுங்கள்
வந்து வீள்கிறேன்
ஒரு முறை கொன்று
ஆத்திரம் அட்ங்கவில்லையா?
அப்படியானால்
இறைவனை வேண்டி
மீண்டு மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
மேல மேலக் கொல்லுங்கள்
இசைந்து தருகிறேன்
உங்கள் பங்கர்களின் மண்சாக்காய்
என்னை அடுக்குங்கள்
மொட்டார் குண்டுகளுக்கு
என் மூழை சிதறட்டும்
சீலைத் துண்டாய்
சொர்ந்த்து கிடக்கிறேன்
என்னை எடுத்து
உன்கள் துப்பாக்கிகளைத்
துடைத்துக் கொள்ளுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
என்னைக் கொல்லுங்கள்
அதற்குமுன் சொல்லுங்கள்
நண்பர்களே
நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள்
ஆனால்...
நான் என்ன கேட்டேன்?
இறக்கவும்... இழக்கவும்...

Thursday, May 20, 2010

குரைக்க ஒரு நாய் வேண்டும்



நாய் என்றால்
அது குரைக்க வேண்டும்
கடிப்பது இரெண்டாம் பட்சமே

கடிக்காததும் நாய்தான் - ஆனால்
குரைக்காதது நாயாகாது

கடிப்பது பாசிசம்
குரைப்பது ஜனநாயகம்
பல நாய்கள் கடித்த்துச் சாதிக்காததை
குரைத்தே சாதித்திருக்கின்றன

குரைக்க ஒரு நாய் வேண்டும்
எங்கள் நாய்களால்
குரைக்கவும் முடியவில்லை
கடிக்கவும் முடியவில்லை

குரைக்கின்ற
மற்ற நாய் களையும் விரட்டிவிட்டு
ஊர் நாய் என்பதையே
தகுதியாய்க் கொண்டு
இந்த இயலா நாய்களையே
வாசலில் கட்டினோம்

பாவம்
அது என்ன செய்யும்
நண்பன் வந்தாலும், எதிரி வந்தாலும்
நாய்க்குரிய பண்பில்
வாலை மட்டும் ஆட்டுது

( கடைசிச் சொட்டு உசிரில் ...2000 )

Wednesday, April 28, 2010




உயிரில் ஒட்டு வைத்து

சிரித்தால் எனக்கு மோட்சம்
பார்த்தால் பாக்கியம்
தொட்டால் உயிர்ப்பு
விட்டால் மரணம்
மழையாக நனையலாம்
உன் எச்சிலிலேயே
பனித்துளியாய் பருகலாம்
உன் வியர்வைத் தூறல்களையே
எப்படி வந்தது
முற்றத்து ரோஜாக்களிலேயே
உனது முகம்
மல்லிகைகளிNயே உனது மணம்
பௌர்ணமி நிலவில் உனது நிறம்
மனப்பூ சில்லிடும்
வாயால் உதிரும் வார்த்தை கேட்டு
புத்துயிர்க்கும் அங்கமெல்லாம்
உன் விரல் பட்டு
நீ செல்கின்ற காலடிகள்
மனசுக்குள் மையித்து ஊர்வலம்
திரும்பி வருகையிலே திருமணஊர்வலம்
உன் பல்குத்தும் குச்சியாகவோ
வாய் கழுவும் நீராவோ ஆகிறேன்
தந்த முத்தக் கடனுக்காக
சமையலறைக் கையுறையாகவோ
நகம் வெட்டியாகவோ ஆகிறேன்
சுட்டுவிரல் தேனை
சுவைக்கத் தந்த கடனுக்காக
பாதத்துக்கு செருப்பாகிறேன்
உடுத்திக் கொள்ள சேலையாகிறே;ன்
ஈன்ற கடனுக்காக
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச்சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்?

எஸ்.நளீம்- இலங்கை




















சுமையா


டு நிசியில்
உன் கூடு கலைந்தது
உன் எதிர் வினையால்
மனசு படபடக்க
தூரத்தே உன் குரல்
தேய்ந்தழிpந்தது வெள்ளாப்பில்
உன் இறப்புக்கு சாட்சியாய்
இரத்தமும் இறகும் கிடந்தது.
எஸ்.நளீம் இலங்கை

எழுந்து நிற்கும் நீராலானவள்

பாதவேர் பற்ற மண்ணின் ஊற்றாகி
வான்நோக்கி அசைந்தோடும்
பச்சை நதி யாரம்மா
சாமரச் சுவாசம்
காற்றில்
கலக்கும் அமிர்தம்
உன் தாவணி உருவி
இரா இருட்டில்
மீன் பிடிக்கும் வெளவால்
உனக்குள் கடல் பொங்கி அழாதே
அது பாலாகி தேனாகி மதுவாகி
உனை மொய்க்கும் ஊர்ப்பறவை
வேலியிட யாருண்டு
செக்கச் சிவந்த பூ தாம்;பூல வாய்
உன்னில் மிதக்க
எழுந்து நிற்கும் நீராலானவளே
உன்னிலும் அலை எழுப்பும்
காற்று.

எஸ். நளீம், இலங்கை

உன் மகுடி நாதம்

என்னில் சொரிய உன்னில்
எப்படி உற்பத்திக்க்pறாய்
இப்படிப் பெரிதாய் அன்பை
மயங்கி உன் மகுடிக்கு முன்னால்
கைகட்டி நிற்கிறேன்
தவளைகள் தலையிலேறிக் குதிக்க
எலிகளும் எள்ளி நகைக்கின்ற கேவலம்
கரப்பான்களும் என் மீது
சிறுநீர் கழிக்கின்ற துயரம்
கழுகுகளிடமிருந்து தப்பிப்பிழைக்க
வேண்டும்தான்
அதற்காக
இந்த அற்பங்களிடம்
என்னால் தலை வணங்க முடியாது
நான் ஆனவளே
சற்று நிறுத்து உன் மகுடி நாதத்தை
நான் நல்ல பாம்பென்று
நிரூபித்து வருகிறேன்.

எஸ்.நளீம் - இலங்கை