Wednesday, April 28, 2010

நார் நாராய் மழைத் தூறல் ஓலை முனையில் எறும்பூர்ந்து



மங்கிய இருளில் மூழ்கி
குப்பி விளக்கின் செம்மஞ்சள் கவிகிறது.
அறைச்சுவரில் பேய்வெயில்
முகத்தில் குந்தி சிறகாட்டும்
சிறு வண்ணாத்தி
இமைகள் பார்த்தே இருக்கிறாய்
சுடு சுவாசக் காற்று
இரவுத் தென்றல் கதகதக்கும் ஸ்பரிசம்
நெற்றி முடி ஊஞ்சல்போல
நார் நாராய் மழைத் தூறல்
ஓலை முனையில் எறும்பூர்ந்து
குண்டு விழுந்து வெடித்துச் சிதறி
களிமண் தரையெல்லாம்
தொப்புள் குழிகள்
பூத்துமடியா
தழும்பும் இரு மழைக் குமிழி
கருங் கூந்தல் கலைந்து வீழ்ந்து
இடையில் நீர் அருவி
அழகையெல்லாம் மேய்ந்தலைந்து
விறைப்பேறி மனம்
வயிற்றுக் கடலோடா
இடுங்கித் தாண்ட காகிதக் கப்பல்
நீர் நிறைந்து மிதக்கக் கூடும்
எனைக் கவரும் கவிதை ஒன்றை
இன்றிரவில் நான் எழுதக்கூடும்
அது
கைபொத்திக் கால்உதைத்து
எனைப் பார்த்து சிரிக்கக்கூடும்

எஸ்.நளீம் - இலங்கை

No comments:

Post a Comment