Tuesday, April 20, 2010


தலைக்குள் அணில்

சைக்கிளில் காலூன்றி
முற்றத்தில் நின்று
பாளை வெடித்துச் சிரிக்கிறாயே
யாரும் பார்த்து விட்டால்
கை வீசித்; துரத்து
காக்கை வந்து முட்டையிட்டு
குயில் குஞ்சு பொரிக்க
நீயென்ன பொதுச்சொத்தா
எனக்கு மாமி தந்த பிள்ளை
சீவிப் பேன் நீக்கி
உச்சியில் அள்ளி முடிந்த கேசம்
காற்றுக்குக் கலைந்தாடும்
ஆனால் உன் தலைக்குள் அணில்
பூ நட
வளைத்து நட்ட கற்களே
உன் காலுக்குக் கொலுசாகி
உன் இடுப்பு மடிப்பில் நடந்து
தொப்புள் தோண்டிய வண்டை
கிள்ளியெறி
வாட்ட சாட்டமாய்
வளைந்து நெளியும்
பருவச் சிறுக்கி
வயதுக்கு வந்து
காதில் அணிந்த மணப் பந்தல்;
காற்றுக்காடி உதிர்கிறது
குரும்பட்டி பருத்த மார்பாகி
உன் கக்கத்திலிருந்து
இள நீர் திருகும் என் ஆசை
பன்னாடைக்குள் பதுக்கு
உன் பருவச் செழிப்பை
நீ பால் தரும் தாயாகி
நாங்கள் குழந்தைகளாகி
சீ……வேண்டாம்
நீ தென்னையாகவே இரு
சூச்சூ......
அதோ மட்டையில் கிளி.

எஸ்.நளீம் - இலங்கை

No comments:

Post a Comment